மாநில அரசு ஊழியர்களுக்கு எந்த ஓய்வூதிய திட்டம்? குழு அமைத்து தமிழக அரசு உத்தரவு - Minnalseithi

Latest

Search This Blog

Wednesday, February 5, 2025

மாநில அரசு ஊழியர்களுக்கு எந்த ஓய்வூதிய திட்டம்? குழு அமைத்து தமிழக அரசு உத்தரவு

 மாநில அரசு ஊழியர்களுக்கு எந்த ஓய்வூதிய திட்டம்? குழு அமைத்து தமிழக அரசு உத்தரவு


தமிழ்நாட்டில் அரசு ஊழியர்களுக்குப் பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.


இந்த கோரிக்கையை அரசு ஊழியர்கள் தொடர்ந்து எழுப்பி வரும் சூழலில், தமிழ்நாடு அரசு மிக முக்கியமான உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது. இது குறித்து நாம் பார்க்கலாம்.


நமது நாட்டில் 2003ம் ஆண்டுக்கு முன்பு வரை பழைய ஓய்வூதிய திட்டம் பின்பற்றப்பட்டு வந்தது. இருப்பினும், அப்போதிருந்த வாஜ்பாய் தலைமையிலான மத்திய அரசு பழைய ஓய்வூதிய திட்டத்திற்குப் பதிலாக புதிய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தியது.


ஓய்வூதிய திட்டம்:


அதன் பிறகு அரசுப் பணியில் சேர்ந்தவர்களுக்கு இந்த புதிய ஓய்வூதிய திட்டமே பின்பற்றப்படுகிறது. இருப்பினும், மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்றே அரசு ஊழியர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இதற்காக அவ்வப்போது போராட்டத்தையும் கூட அரசு ஊழியர்கள் நடத்தியுள்ளனர்.


கடந்த 2021 சட்டசபைத் தேர்தல் சமயத்தில் கூட பழைய ஓய்வூதியத்தைக் கொண்டு வருவோம் என்பதை திமுக ஒரு வாக்குறுதியாகவே கூட அளித்திருந்து. திமுக ஆட்சியை அமைத்த பிறகு, வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் பழைய ஓய்வூதிய திட்டத்தைக் கொண்டு வர வேண்டும் என்றும் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தது. இதற்கிடையே பழைய ஓய்வூதிய திட்டம், பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் ஆகிய மூன்று ஓய்வூதிய திட்டங்கள் குறித்து விரிவாக ஆராய்ந்திட 3 அதிகாரிகள் கொண்ட குழுவை அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது..



இது தொடர்பாகத் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "கடந்த 2003-ஆம் ஆண்டு ஏப்ரல் 1 முதல் மாநில அரசுப் பணியாளர்களுக்குப் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதே தருணத்தில் மத்திய அரசுப் பணியாளர்களுக்குத் தேசிய ஓய்வூதியத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இருப்பினும் மாநில அரசுப் பணியாளர்களுக்குத் தொடர்ந்து பங்களிப்பு ஓய்வூதியத் திட்டமே தொடர அனுமதிக்கப்பட்டது.


எனினும், மாநில அரசுப் பணியாளர்கள் 01.04.2003-க்கு முன்பிருந்த திட்டத்தைச் செயல்படுத்தத் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதனிடையே மத்திய அரசுப் பணியாளர்களுக்கான ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் குறித்த அறிவிக்கை கடந்த மாதம் வெளியிடப்பட்டது.


குழு அமைத்து உத்தரவு:


எனவே, பழைய ஓய்வூதியத் திட்டம், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் ஆகிய மூன்று ஓய்வூதியத் திட்டங்கள் குறித்து விரிவாக ஆராய ஒரு குழு அமைக்கத் தமிழக அரசு முடிவு செய்துள்ளது. மாநில அரசின் நிதிநிலையையும், பணியாளர்களின் ஓய்வூதியக் கோரிக்கைகளையும் கருத்தில் கொண்டு, நடைமுறைப்படுத்தத்தக்க உரிய ஓய்வூதிய முறை குறித்து பரிந்துரையை அரசுக்கு அளிக்க 3 அதிகாரிகள் அடங்கிய குழு ஒன்றை அமைத்து உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது.


அதன்படி, ககன்தீப் சிங் பேடி- ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர், கே.ஆா்.சண்முகம்- மெட்ராஸ் ஸ்கூல் ஆப் எக்கனாமிக்ஸ் முன்னாள் இயக்குநர், பிரத்திக் தாயள்- நிதித் துறை துணைச் செயலர் (பட்ஜெட்) ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு தனது விரிவான அறிக்கை மற்றும் பரிந்துரையை ஒன்பது மாதங்களுக்குள் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது" என்று அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment