பாடாய்ப் படுத்தும் வாய்வு பிரச்னைகளிலிருந்து விடுபட சில எளிய வழிகள்..!
எண்ணெய்யில் பொறித்த இறைச்சி, கொழுப்பு நிறைந்த உணவுகள், செரிமானத்தைத் தாமதமாக்கி, வாயுப் பெருக்கத்திற்கு வழிவகுக்கும். நார்ச்சத்து மிகுந்த உணவுகள், உடலுக்கு அதிக நன்மை செய்வதாயிருப்பினும் சிலருக்கு வாயுவை உருவாக்கலாம்.
பெருங்குடல் சார்ந்த நோய்கள், குளுடன் புரதத்தைச் செரிக்க முடியாமல் போவது, செரிமான தசைகளில் பாதிப்பு, கட்டுப்படுத்தப்படாத சர்க்கரை நோய், வயிற்றுப் புண் போன்றவற்றின் காரணமாக, அந்தந்த நோய்க் குறிகுணங்களுடன், ஒரு நாளில் பல முறை வாயு வெளியேறும்.
குடலில் சேரும் வாயுக்களில் கரியமில வாயு, ஹைட்ரஜன், நைட்ரஜன், மீதேன், ஆக்சிஜன் போன்றவை அடக்கம். சில நேரங்களில் கந்தகம் சேர்ந்த கூட்டுப்பொருள்கள் உருவாவதால், நாற்றம் உண்டாகிறது.
அடிக்கடி வாயு வெளியேறுவதைத் தடுக்கும் உணவுகள்/மருந்துகள்
புதினா துவையலை அவ்வப்போது செய்து சாப்பிடலாம். பழங்களில் அன்னாசி நல்லது. நலம் பயக்கும் பாக்டீரியாக்களை அதிகரிக்க மோர் சிறந்த பானம். மலத்தை இளகலாக்க நிறையத் தண்ணீர் குடிப்பது முக்கியம். பூண்டுப் பற்களை நன்றாக வேகவைத்துச் சாப்பிடலாம். சித்த மருந்துகளில், இஞ்சித் தேன், இஞ்சி ரசாயனம், சோம்புத் தீநீர், ஓமத் தீநீர், பஞ்ச தீபாக்கினி சூரணம் (சுக்கு, மிளகு, திப்பிலி, ஏலம், சீரகம் சேர்ந்தது), ஏலாதி சூரணம். சீரகச் சூரணம் போன்ற மருந்துகள் சிறந்த பலனை அளிக்கும். தயிர்ச்சுண்டி சூரணம் எனும் மருந்து, வாயுப் பிரச்னையோடு சேர்த்து, வயிற்று உப்புசம், வயிற்றுவலி போன்றவற்றை உடனடியாக குறைக்கும்.
அந்த டயட், இந்த டயட் என மாற்றி மாற்றி உணவுகளை எடுத்துக்கொள்வதைத் தவிர்த்து, உணவில் ஒரு ஒழுங்குமுறையைப் பின்பற்ற வேண்டியது அவசியம்!
No comments:
Post a Comment