பார்லருக்குப் போகாமலேயே முகத்தை பளபளப்பாக்க டிப்ஸ்..! - Minnalseithi

Latest

Search This Blog

Monday, September 23, 2024

பார்லருக்குப் போகாமலேயே முகத்தை பளபளப்பாக்க டிப்ஸ்..!

பார்லருக்குப் போகாமலேயே முகத்தை பளபளப்பாக்க டிப்ஸ்..!


“முகச் சருமம் டல்லாக இருக்கிறதா? இந்த த்ரீ ஸ்டெப் நேச்சுரல் ஃபேஷியலைச் செய்யுங்கள். இதனால் உங்கள் முகம் உடனடியாக பிரகாசிப்பதோடு, தொடர்ந்து இந்த த்ரீ ஸ்டெப் ஃபேஷியலைச் செய்துவர கொஞ்சம் கொஞ்சமாக முகத்தில் உள்ள மாசு, மரு அனைத்தும் நீங்கிவிடும்’’.


``சருமம் பொலிவுடன் ஜொலிக்க முதலில் அதனை க்ளென்ஸ் (Cleanse) செய்யவேண்டும். அதற்கு வெள்ளரிக்காய், தக்காளி, வெள்ளைச் சர்க்கரை ஆகிய மூன்றும் மிகவும் கைகொடுக்கும். வெள்ளரிக்காயில் சிலிக்கான் சத்து உள்ளதால், அது சருமத்திற்கு மிகவும் நல்லது. தக்காளியில் லைக்கோபின் சத்து உள்ளது. இது சருமத்திற்கு நல்லதொரு க்ளென்ஸிங் ஏஜென்ட்டாகச் செயல்படும் ஆற்றல் கொண்டது. கூடவே, சருமத்தை பிரகாசிக்க வைக்கும் தன்மையும் இதற்கு உண்டு. வெள்ளைச் சர்க்கரை, இறந்த செல்களை நீக்கி சருமத்தைப் புதுப்பிக்கும் ஆற்றல் கொண்டது.


முகத்தை க்ளென்ஸ் செய்ய..!


ஒரு பவுலில் கொஞ்சம் சர்க்கரையை எடுத்துக்கொள்ளுங்கள். ஒரு தடிமனான வெள்ளரித் துண்டை எடுத்து, லேசாகப் பிழிவதுபோலச் செய்தால் வெள்ளரிக்காயில் உள்ள சதை காயை விட்டு வெளியே வரும். இதனை வெள்ளைச் சர்க்கரையில் தோய்த்து எடுத்து, எடுத்து முகம் முழுக்க மசாஜ் கொடுப்பதுபோலத் தேய்த்திடுங்கள். இதன் மூலம் சருமத்தில் இருக்கும் இறந்த செல்கள் நீங்கும். வெள்ளரிக்காய் ஒரு கூலிங் ஏஜென்ட்போலச் செயல்பட்டு முகத்திற்கு ஒரு புத்துணர்வு கொடுக்கும். குறிப்பாக, மூக்கின் மேலே கரும்புள்ளிகள் இருப்பவர்கள், அதில் சர்க்கரையில் தோய்க்கப்பட்ட வெள்ளரிக்காய்த் துண்டை வைத்துத் தேய்க்கும்போது அவை நீங்கிவிடும்.


அதேபோல, தக்காளித்துண்டையும் லேசாகப் பிழிந்துவிட்டு அதனை சர்க்கரையில் தோய்த்து முன்புபோலவே முகம் முழுக்கத் தேய்த்துவிடுங்கள். இதனை வாரத்தில் இரண்டு நாள்கள் எல்லோருமே செய்யலாம். நல்லதொரு பளிச் லுக் முகத்திற்குக் கிடைக்கும். குறிப்பாக, வெயிலில் சென்றுவிட்டு வருபவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளது.


இரண்டு, மூன்று நிமிடங்கள் கழித்து முகத்தை லேசாகத் துடைத்து, ஒட்டிக்கொண்டிருக்கும் சர்க்கரைத் துணுக்குகளை எடுத்துவிடுங்கள். தக்காளி ஒத்துக்கொள்ளாது என்பவர்கள், வெறும் வெள்ளரிக்காயில் மட்டும் இதனைச் செய்யலாம். மற்றபடி நார்மல் சருமம் உள்ளவர்கள் இரண்டிலுமே கொஞ்ச கொஞ்ச நேரம் மசாஜ் செய்துகொள்ளலாம்.


பால் - ஓட்ஸ் மசாஜ்!


அடுத்த ஸ்டெப்பாக, ஒரு பாத்திரத்தில் ஒரு கப் பாலை எடுத்து அடுப்பில் வைத்துச் சூடாக்குங்கள். பால் சூடானதும் அதில் ஒரு கப் ஓட்ஸை சேருங்கள். கலவையைக் கிளறிவிட்டுக்கொண்டே இருந்தால் பாலும் ஓட்ஸும் நன்கு சேர்ந்து கெட்டியாகிவிடும். அடுப்பை அணைத்து கலவையை ஆறவிடுங்கள். கலவை ஆறியதும் அதிலிருந்து தேவையான அளவுக்கு எடுத்து ஒரு வெள்ளைத் துணியில் போட்டு முடிச்சு போலக் கட்டிக்கொள்ளுங்கள்.


இந்த முடிச்சை வைத்து மசாஜ் போல முகத்தை மென்மையாகத் தேய்த்துவிடுங்கள். முடிச்சுக்குள் இருக்கும் பாலும் ஓட்ஸும் முகத்தில் முழுமையாக இறங்கும் அளவுக்கு ஒரு ஐந்திலிருந்து பத்து நிமிடங்கள் வரைக்கும் நீங்கள் இந்த மசாஜைக் கொடுக்கலாம். மசாஜ் செய்துகொண்டிருக்கும்போதே முடிச்சில் இருக்கும் கலவை மிகவும் இறுக்கமாக இருப்பதுபோல உணர்ந்தால், துணியிலிருக்கும் கலவையைக் கொட்டிவிடுங்கள். பாத்திரத்தில் மீதமிருக்கும் கலவையிலிருந்து தேவையான அளவு அதேதுணியில் எடுத்துக்கொண்டு மசாஜைத் தொடரலாம். முகத்தைப் பிரகாசிக்க வைக்கும் ஆற்றல் இந்த மசாஜுக்கு உண்டு.


சருமத்தை டாலடிக்க வைக்கும் ஃபேஸ் பேக்!


இது மூன்றாவது ஸ்டெப். வீட்டில் சந்தனக்கட்டை இருந்தால் அதில் சிறிது பன்னீர்விட்டு கொஞ்சம்போல இழைத்துத் தனியாக வையுங்கள். ஏழெட்டுப் பாதாமை எடுத்து நீர் விட்டு பேஸ்ட் போல அரைத்துக் கொள்ளுங்கள். அதனுடன் இரண்டு டீஸ்பூன் வெள்ளரிக்காய்ச் சாற்றைச் சேருங்கள். இதில் குங்குமப்பூ ஒரு சிட்டிகை, கடலை மாவு ஒரு டீஸ்பூன் மற்றும் இழைத்த சந்தனத்தைச் சேர்த்து ஃபேஸ் பேக் பதத்திற்குக் கலந்துகொள்ளுங்கள். இதை, கழுத்திலிருந்து ஆரம்பித்து முகம் முழுக்கப் போடுங்கள். கூடவே, ஸ்லைஸ் செய்த வெள்ளரிக்காயைக் கண்களுக்கு மேல் வைத்துவிடுங்கள்.


பேக்கைப் போட்ட 10 நிமிடங்களுக்குள் சருமம் இறுகிவிடும். பின்னர் ஈரத்துணியால் கொஞ்சம் கொஞ்சமாக பேக்கை நீக்கிடுங்கள். சருமத்தை ஜொலிக்கவைக்கும் பொருள்கள் இதில் இருப்பதால் கண்கூடாக ரிசல்ட்டைப் பார்க்கலாம். வாரத்தில் இரண்டு நாள்கள்கூட இந்தப் பேக்கைப் போட்டுக்கொள்ளலாம். பருக்கள் உள்ளவர்கள் இதைத் தவிர்க்கவும்.


பார்லருக்குப் போகாமலேயே பளபள முகம்... உங்கள் வசமாகியிருக்கும்!”

No comments:

Post a Comment