ஹார்ட் அட்டாக் வருவதைத் தடுக்க கட்டாயம் பின்பற்ற வேண்டிய இரண்டு விஷயங்கள் ..! - Minnalseithi

Latest

Search This Blog

Monday, June 3, 2024

ஹார்ட் அட்டாக் வருவதைத் தடுக்க கட்டாயம் பின்பற்ற வேண்டிய இரண்டு விஷயங்கள் ..!

 ஹார்ட் அட்டாக் வருவதைத் தடுக்க  கட்டாயம்  பின்பற்ற வேண்டிய இரண்டு விஷயங்கள் ..!


இதய நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருந்து, மாத்திரைகள், சிகிச்சைகள் ஒருபுறமிருக்க... இதய நோய்களைத் தடுக்க இரண்டு விஷயங்களைக் கட்டாயமாகப் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்துகிறோம். அவை... ஆரோக்கியமான உணவுப்பழக்க வழக்கம் மற்றும் உடற்பயிற்சி.



உணவுப்பழக்கத்தை எடுத்துக்கொண்டால் அரிசி, கோதுமை உணவுகளை அளவுடன் சாப்பிட வேண்டும். காய்கறிகள், பழங்களை தாராளமாகச் சாப்பிட வேண்டும். பால், அசைவ உணவுகளைக் குறைந்த அளவு சாப்பிட வேண்டும். எண்ணெய், சர்க்கரை, உப்பை மிகக் குறைந்த அளவே உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று அனைவருக்குமே அறிவுறுத்துவோம்.


ஆயுர்வேத குறிப்புகளில் முக்கிய இடம்பெறும் இஞ்சி


ஜீரண சக்தியைப் பெருக்குவதற்காகவும் பசியைத் தூண்டுவதற்காகவும் உடலின் நுண்ணிய பாதைகளைச் சுத்திகரிப்பதற்காகவும் சக்தி வாய்ந்த மருந்தாக இஞ்சி பரிந்துரைக்கப்படுகிறது. அதிகப்படியான பொட்டாசியம், மாங்கனீஸ், குரோமியம், மெக்னீசியம் மற்றும் துத்தநாகம் போன்ற சத்துகளைக் கொண்ட இஞ்சி, அழற்சிகளை நீக்கும் குணம் மிகுந்தது. மேலும், கொழுப்புத் தன்மையைக் குறைக்க, ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த, ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்த, ரத்த நாளத்தில் உள்ள அடைப்புகளை நீக்க என்று பல பிரச்னைகளைக் குறைக்கும் மற்றும் நீக்கும் தன்மை கொண்டுள்ளது. இந்த இஞ்சியை வெறுமனே சாப்பிடுவதைவிட துவையல், ஊறுகா‌ய் மற்றும் சுக்கு என பல வடிவங்களில் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.


அடுத்து... 'இஞ்சி - பூண்டு இல்லாமல் எங்கள் வீட்டில் சமையலே இல்லை' என்று பலர் சொல்வதைக் கேள்விப்பட்டிருப்போம். இஞ்சியும், பூண்டும் உயர் ரத்த அழுத்தத்துக்கு நல்ல மருந்து என்கிறது சித்த மருத்துவம். தினமும் பூண்டை வேக வைத்தோ, தீயில் சுட்டோ சாப்பிட்டு வந்தாலே, உயர் ரத்த அழுத்தம் குறைவதோடு இதயத்துக்கும் நல்லது என்கிறார்கள். அதாவது, ரத்தக் குழாயில் படியக்கூடிய கொழுப்பை பூண்டு கொஞ்சம் கொஞ்சமாகக் கரைத்து விடும். பச்சையாகச் சாப்பிட்டால் அதிக பலன் கிடைக்கும் என்று நினைத்து சிலர் பூண்டை பச்சையாகச் சாப்பிடுவார்கள். அது நல்லதல்லை. அதில் உள்ள அமிலத் தன்மை நேரடியாக வயிற்றுக்குள் சென்றால் நிச்சயம் கூடுதலாக பிரச்னையை உண்டு பண்ணும் என்பதையும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். எனவே, உங்களின் உடல்நிலையைப் பொறுத்து ஊட்டச்சத்து ஆலோசகர்களின் ஆலோசனைப்படி பூண்டை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.


'இறப்பைத் தவிர மற்ற எல்லா நோய்களையும் குணப்படுத்தக்கூடியது கருஞ்சீரகம்' என்று சொல்வார்கள். யுனானி மருத்துவத்தில் கருஞ்சீரக எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது. மருத்துவக் குணங்கள் நிறைந்த கருஞ்சீரகத்தின் விதையில் உள்ள 'தைமோக்வினோன்' (Thymoquinone) என்ற வேதிப்பொருள் வேறு எதிலும் இல்லை என்கிறார்கள் ஊட்டச்சத்து ஆலோசகர்கள். இது, நோய் எதிர்ப்பு சக்தியைத் தரக்கூடியது. இதில் உடலுக்கு நன்மை செய்யும் கொழுப்பு இருப்பதால், கெட்ட கொழுப்பைக் குறைக்க உதவும். மேலும், அமினோ அமிலங்கள், வைட்டமின்கள், கால்சியம், இரும்புச்சத்து போன்றவையும் கருஞ்சீரகத்தில் உள்ளன. சக்திவாய்ந்த ஆன்டி ஆக்ஸிடன்ட் ஆகச் செயல்படும் கருஞ்சீரகம் இதயநோய், புற்றுநோய் போன்றவற்றைக் குணப்படுத்தும் தன்மை கொண்டதாகவும் கருதப்படுகிறது. இது எலும்பு மஜ்ஜை உற்பத்தியைச் சீராக்கி, புற்றுநோய்க் கட்டிகள் ஏற்படாதபடி பாதுகாக்கும் என்பதால் கருஞ்சீரகத்தை எந்த உணவில், எந்த அளவில் சேர்த்துக் கொள்ளலாம் என்று தெரிந்துகொண்டு பயன்படுத்தி இதய நலத்தை மேம்படுத்தலாம்.


"உடல் முழுவதும் ரத்தம் செல்ல, அதற்குண்டான வேலையைச் செய்கிறது நம் இதயம். இதயத்துக்குத் தேவையான இந்த ரத்தத்தை எடுத்துச் செல்லும் குழாய்களில் கொழுப்புப் படிவதாலோ அல்லது ரத்தம் உறைந்து போவதாலோ அடைப்பு ஏற்படலாம்.  உணவே மருந்தின் கூற்றின்படி இஞ்சி, பூண்டு, கருஞ்சீரகம் போன்றவை, ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதால், ரத்த நாளத்தில் உள்ள அடைப்புகளை நீக்குவதால், ரத்தக் குழாயில் படியக்கூடிய கொழுப்பைக் கரைப்பதால், உயர் ரத்த அழுத்தத்தைக் குறைப்பதால், மருத்துவர்களின் ஆலோசனைப்படி உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.


அத்துடன் நாம் உண்ணும் உணவை ரசித்து, ருசித்து, பொறுமையாகச் சாப்பிட வேண்டும். சாப்பாட்டு மேஜையை விவாத மேஜையாகப் பயன்படுத்தக் கூடாது. 70 வயதைக் கடந்தவர்களுக்கு உணவுக்குழாயில் செல்ல வேண்டிய உணவின் சிறு துணுக்குகூட மூச்சுக்குழாயில் சென்றுவிட்டால் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம். இதை புரையேறுதல் என்பார்கள். 'உங்களை யாரோ நினைக்கிறார்கள்... அதனால்தான் புரையேறுகிறது' என்பார்கள். இப்போதுள்ள வாழ்க்கை முறையில் அவசர யுகத்தில் நம்மை நினைக்க யாரும் தயாராக இல்லை. நாம் தேவையில்லாத விஷயத்தை நினைத்துக்கொண்டு அவசர அவசரமாகச் சாப்பிட்டால்தான் புரையேறும். நான் எல்லாருக்கும் சொல்வது இதைத்தான்.... அளவான அறுசுவை உணவுடன் நகைச்சுவையையும் சேர்த்துக் கொள்ளுங்கள். அதிக ரத்தக் கொதிப்பால் வரும் மாரடைப்பைவிட, மகிழ்ச்சி குறைவால் வரும் மாரடைப்பே அதிகம். இந்த மகிழ்ச்சிக்கான அடித்தளமே நகைச்சுவைதான்.


"உணவை மட்டுமே பிரதானமாக எடுத்துக்கொள்ளக்கூடாது. உடற்பயிற்சியும் தேவை. தினமும் அதிக பட்சம் 45 நிமிடங்கள், குறைந்தபட்சம் 20 நிமிடங்களாவது உடற்பயிற்சி மேற்கொள்வது அவசியம். நடைப் பயிற்சி, ஓட்டப் பயிற்சி, நீச்சல் அல்லது சைக்கிளிங் பயிற்சி செய்வது உடலுக்கு ஆரோக்கியம் மட்டுமல்ல, அது ஊட்டமாகவும் உடலில் செயல்படுகிறது. தோட்டப் பராமரிப்பு, வீட்டு வேலைகள், மாடிப்படிகளில் ஏறி இறங்குவது, நடப்பதும் கூட நல்ல உடற்பயிற்சிகள்தாம்.


கட்டுப்பாடான உணவுமுறை மட்டுமல்ல... தொடர் உடற்பயிற்சிகள் மாரடைப்பு அபாயத்தைக் குறைக்கின்றன. யோகா மற்றும் தியானப் பயிற்சி போன்றவை மன அழுத்தம் மற்றும் ரத்த அழுத்தத்தைக் குறைப்பதால், மாரடைப்பு வராமல் தடுக்கப்படுகிறது... மகிழ்ச்சியாக வாழ உதவுகிறது என்பதை நினைவில்கொள்ளுங்கள்."

No comments:

Post a Comment