பள்ளி மாணவிகளுக்காக ‘அகல் விளக்கு’ திட்டம்!சட்டசபையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சரின் அறிவிப்புகள் - Minnalseithi

Latest

Search This Blog

Tuesday, June 25, 2024

பள்ளி மாணவிகளுக்காக ‘அகல் விளக்கு’ திட்டம்!சட்டசபையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சரின் அறிவிப்புகள்

 பள்ளி மாணவிகளுக்காக ‘அகல் விளக்கு’ திட்டம்!சட்டசபையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சரின் அறிவிப்புகள்


உடல், மனம், சமூக ரீதியிலான இடையூறுகளிலிருந்து மாணவிகள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள ‘அகல் விளக்கு’ திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.


பள்ளி மாணவிகள் பயனடையும் வகையில், ‘அகல் விளக்கு’ திட்டம் செயல்படுத்தப்படுமென சட்டப்பேரவையில் நேற்று (ஜூன் 24) அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளார்.


தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் கடந்த 21ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. ஒரு நாள் விடுமுறைக்கு பிறகு தமிழ்நாடு சட்டப்பேரவை நேற்று (ஜூன் 24) மீண்டும் கூடியது.


நேற்று பள்ளிக் கல்வித்துறை, உயர்கல்வித் துறை, வருவாய் துறை ஆகிய துறைகளின் மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பள்ளிக்கல்வித்துறை சார்ந்த அறிவிப்புகளை வெளியிட்டுப் பேசினார்.


அப்போது, அரசுப் பள்ளிகளில் 9 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவிகள் பயனடையும் வகையில், ‘அகல் விளக்கு’ திட்டம் செயல்படுத்தப்படுமென சட்டப்பேரவையில் நேற்று (ஜூன் 24) பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளார்.


உடல், மனம், சமூக ரீதியாக உண்டாகும் பல்வேறு இடையூறுகளிலிருந்து, மாணவிகள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள இத்திட்டம் மிகுந்த பயனுள்ளதாக இருக்குமென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


9 - 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவிகள், எவ்வித இடர்பாடுகளுமின்றி பள்ளிகளுக்கு தொடர்ந்து வருகை தருவதை உறுதிசெய்ய ரூ. 50 லட்சம் மதிப்பில் ‘அகல் விளக்கு’ திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.


இத்திட்டத்தின் கீழ், இணையதளத்தைப் பாதுகாப்பாகக் கையாள்வது குறித்த வழிகாட்டுதல்களை வழங்கிட ஆசிரியைகள் அடங்கிய குழுக்கள் அமைக்கப்படுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


சட்டசபையில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சரின் அறிவிப்புகள்:


*காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு கல்வி குறித்து, 2.32 கோடி ரூபாய் மதிப்பீட்டில், மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். அரசு பள்ளிகளில் மாணவர்களின் ஆளுமை திறனை மேம்படுத்தும் வகையில், மாதிரி சட்டசபை, மாதிரி பார்லிமென்ட் கூட்டம், 2 கோடி ரூபாய் செலவில் நடத்தப்படும்.


*ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு, அடிப்படை கணினி அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவு திறன் பயிற்சி வழங்கப்படும்.


மாற்றுத்திறன் குழந்தைகள், விளையாட்டு வாயிலாக கற்றல் அனுபவங்களை பெறும் வகையில், அனைத்து மாவட்டங்களிலும் 3.80 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பல்வகை திறன் பூங்கா உருவாக்கப்படும்.


அரசு பள்ளி மாணவியர் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும், சமூக ரீதியாகவும் தங்களை பாதுகாத்துக் கொள்ளவும், இணையதளங்களை பாதுகாப்பாக கையாள்வது குறித்தும், வழிகாட்டுதல் வழங்குவதற்கு, 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், 'அகல் விளக்கு' என்ற திட்டம் துவங்கப்படும்.


அரசு பள்ளிகளில் ஆறு முதல் 12ம் வகுப்பு வரை படித்து, நாட்டில் உள்ள தலைசிறந்த உயர் கல்வி நிறுவனங்களில் சேரும் மாணவர்களின் கல்வி செலவை, அரசே ஏற்றுக் கொள்ளும்.


தமிழர் நாகரிகம், பண்பாடு உள்ளிட்ட தகவல்களை மாணவர்களுக்கு சிறப்பாக கற்பிப்பதற்காக, 1,000 ஆசிரியர்களுக்கு 3 கோடி ரூபாய் செலவில் தொல்லியல் சார்ந்த பயிற்சி வழங்கப்படும்.


வீடுகளில் சொந்த நுாலகம் அமைத்து, சிறப்பாக பயன்படுத்தி வரும் தீவிர வாசகர்களை கண்டறிந்து ஊக்குவிக்கும் வகையில் விருதுகள் வழங்கப்படும்.


இவ்வாறு அமைச்சர் அறிவித்தார்.

No comments:

Post a Comment