பிடெக் ஏஐ படிப்புகளை தேர்ந்தெடுக்கலாமா? தேர்ந்தெடுக்கும்போது என்ன செய்யலாம்? - Minnalseithi

Latest

Search This Blog

Friday, May 17, 2024

பிடெக் ஏஐ படிப்புகளை தேர்ந்தெடுக்கலாமா? தேர்ந்தெடுக்கும்போது என்ன செய்யலாம்?

 பிடெக் ஏஐ படிப்புகளை தேர்ந்தெடுக்கலாமா? தேர்ந்தெடுக்கும்போது என்ன செய்யலாம்?


பிடெக் ஏஐ படிப்புகளை தேர்ந்தெடுக்கலாமா என்பதே பலரின் கேள்வியாக உள்ளது.


செயற்கை நுண்ணறிவு அல்லது செய்யறிவு எனப்படும் ஆர்டிஃபிஷியல் இன்டலிஜென்ஸ் படிப்புக்கு தற்போது மாணவர்களிடயே அதிக வரவேற்பு ஏற்பட்டுள்ளது.


பல தகவல் தொழில்நுட்பப் பணிகளை செயற்கை நுண்ணறிவு எனப்படும் தொழில்நுட்பம் அழித்தொழித்துவிட்டதால், இதனைப் படித்தால் நமக்கு வேலை கிடைக்கும் என்பதே மாணவர்களின் கணக்கு.


அதனால்தான் இந்த ஆண்டு பிடெக் ஏஐ படிப்புகளில் மாணவர்கள் குவிந்து வருகிறார்கள். ஏஐ மற்றும் டேட்டா சயின்ஸ் படிப்புகளைத்தான் அதிகம் பேர் கேட்டுச் சென்று தேடிச் சென்று சேருகிறார்கள். ஆனால், மாணவர்களின் இந்தப் போக்கு அவ்வளவு சரியானதாக இல்லை என்கிறார்கள் தொழில்துறை மற்றும் கல்வியாளர்கள்.


பிடெக் படிப்பில் மாணவர்கள் தகுந்த பாடங்களை சரியாக தேர்ந்தெடுக்க வேண்டும் என்கிறார்கள். அதாவது, பல கல்லூரிகளில் செயற்கை நுண்ணறிவு பாடத்தை எடுக்க பயிற்சி பெற்ற பேராசிரியர்கள் இல்லை, பாடத்தை நடத்தி மாணவர்களுக்குப் புரிய வைக்க போதுமான தொழில்நுட்ப வசதிகளும் இருப்பதில்லை.


அண்ணா பல்கலைக்கழக தரவுகளின்படி, தமிழகத்தில் அண்ணா பல்கலையுடன் இணைந்துள்ள 494 கல்லூரிகளில் 300 கல்லூரிகள் பிடெக் ஏஐ படிப்புகளை வழங்குகின்றன. ஆனால், இந்த எண்ணிக்கை 2020-ல் வெறும் 70 ஆகத்தான் இருந்தது.


இதுவரை செயற்கை நுண்ணறிவு பாடத்தில் அனுமதிக்கப்பட்ட மாணவர் சேர்க்கை 15,000 தான். இந்த ஆண்டு கூடுதலாக 7,650 மாணவர்களை சேர்க்க விண்ணப்பிக்கப்பட்டுள்ளதாக அண்ணா பல்கலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


இந்த நிலையில், மாணவர்களும் அவர்களது பெற்றோர்களும் பிடெக் பட்டப்படிப்பில் செயற்கை நுண்ணறிவு முடித்தவர்களாக இருந்தால் வேலை நிச்சயம் என்று நினைக்கிறார்கள். ஆனால், உண்மை அவ்வாறு இல்லை. செயற்கை நுண்ணறிவு என்பது மிகப்பெரியது. ஒருவேளை அதில் வேலை கிடைக்க வேண்டும் என்றால், மிகப்பெரிய அறிவை பெற்றிருக்க வேண்டும் செயற்கை நுண்ணறிவு துறையில் என்கிறார் கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தி. அதேவேளையில், மெக்கானிக்கல் என்ஜினீயரிங், எலக்ட்ரானிக்ஸ் படித்தவர்கள் கூடுதலாக செயற்கை நுண்ணறிவு பாடத்தைப் படித்து அதில் வேலை வாய்ப்புப் பெறமுடியும் என்பதே உண்மை.


எனவே, பெரும்பாலான கல்லூரிகள் செயற்கை நுண்ணறிவு பாடத்தை நடத்துவதற்குத் தேவையான பேராசிரியர்கள் அல்லது தொழில்நுட்ப வசதிகள் ஏதுமின்றியே பாடத்திட்டத்தில் மாணவர்களை சேர்க்கிறார்கள் என்பதை முதலில் மாணவர்கள் தெரிந்துகொண்டு, தெளிவாக பாடப்பிரிவை தேர்வு செய்ய வேண்டும். இல்லாவிட்டால், கற்றுக்கொடுக்காத பாடத்தில் பட்டம் பெற்று வெளியே வரும் நிலை ஏற்படலாம்.


அண்ணா பல்கலை துணைவேந்தர் ஆர். வேல்ராஜ் பேசுகையில், பல என்ஜினியரிங் படிப்புகளை படித்துக்கொண்டே, செயற்கை நுண்ணறிவு பாடத்தையும் மாணவர்கள் படிக்க முடியும். இங்கு செயற்கை நுண்ணறிவு பாடத்தைத் தொடங்குவதற்கான திட்டம் இதுவரை இல்லை. எல்லாவற்றுக்கும் ஒரு செயற்கை நுண்ணறிவு பாடத்தை சேர்க்க வேண்டும் என்ற அவசியமில்லை என்கிறார்.

No comments:

Post a Comment