சித்ரா பௌர்ணமி 2024: எப்போது? புராண வரலாறு, சிறப்பு, வழிபடும் முறை மற்றும் கிடைக்கும் பலன்கள்..! - Minnalseithi

Latest

Search This Blog

Sunday, April 21, 2024

சித்ரா பௌர்ணமி 2024: எப்போது? புராண வரலாறு, சிறப்பு, வழிபடும் முறை மற்றும் கிடைக்கும் பலன்கள்..!

 சித்ரா பௌர்ணமி 2024: எப்போது? புராண வரலாறு, சிறப்பு, வழிபடும் முறை மற்றும் கிடைக்கும் பலன்கள்..!


சித்ரா பௌர்ணமி 2024 : எப்போது?


சித்ரா பௌர்ணமி வரும் ஏப்ரல் 23-ம் தேதி கொண்டாடப்படுகிறது. ஏப்ரல் மாதம் 22-ம் தேதி மாலை 5.55 மணிக்கு தொடங்குகிறது. அடுத்த நாளான ஏப்ரல் 23 இரவு 7.48 மணிக்கு பௌர்ணமி திதி முடிவடைகிறது. பொதுவாக ஒரு நாள் தொடங்கும் போது என்ன திதியில் தொடங்குகிறதோ அந்த திதியே நாள் முழுவதும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். எனவே பௌர்ணமி திதி 22-ம் தேதி மாலையே தொடங்கினாலும் ஏப்ரல் 23-ம் தேதியே சித்ரா பௌர்ணமியாக கொண்டாடப்படுகிறது.


சித்ரா பௌர்ணமி வழிபாடு


இந்த சித்ரா பௌர்ணமி நாளில் சித்திரகுப்தரை வணங்குவதன் மூலம் நம் எண்ணத்தில் பாவம் செய்யும் எண்ணம் நீங்கி புண்ணியம் செய்யும் குணம் அதிகரிக்கும் என்றும் நம்பப்படுகிறது.

மேலும் இந்த சித்ரா பௌர்ணமி நாளில் சிவபெருமானை வழிபடுவதுடன், முருகனையும் அம்பாளையும் வழிபடுவதும் சிறப்பாகும். சித்ரா பௌர்ணமி நாளில் வீட்டில் வழிபடுவதுடன், கோயிலுக்கு சென்று வழிபடுவதும் மிகவும் முக்கியம்.


இந்த நாளில் கோயில்களில் தெய்வங்களின் சக்தி அதிகமாக இருக்கும் என்றும் நம்பப்படுகிறது. எனவே இந்த நாளில் கோயிலுக்கு சென்று வழிபடுவதன் மூலம் நம் பிரார்த்தனைகள் அனைத்தும் நிறைவேறும் என்றும் கூறப்படுகிறது. மேலும் இந்த நாளில் கோயிலுக்கு செல்வதால் அங்குள்ள நேர்மறை அதிர்வலைக நம் மீது படுவதால், அது நம் வாழ்விலும் நேர்மறை தாக்கத்தை ஏற்படுத்தி நமக்கு நல் வாழ்க்கை கிடைக்கும் என்பது நம்பிக்கை.


ஒரு வேளை கோயிலுக்கு செல்ல முடியாதவர்கள் வீட்டிலேயே பௌர்ணமி பூஜை செய்து வழிபடலாம். வீட்டை முந்தைய நாளே சுத்தம் செய்து, பௌர்ணமி அன்று அதிகாலையில் வீட்டின் பூஜை அறையில் உள்ள சாமி படங்களுக்கு பூக்கள் வைத்து அலங்கரித்து விளக்கேற்றி, சர்க்கரை பொங்கல் வைத்து நைவேத்யம் படைத்து வணங்க வேண்டும். 

மேலும் சித்ரா பௌர்ணமி நாளில் கிரிவலம் திங்கள் மாலை 6 மணியில் இருந்து ஏப்ரல் 23 இரவு 8 மணி வரை கிரிவலம் செல்லலாம்.


புராண வரலாறு 


சித்திரை மாதத்தில் சித்திரை நட்சத்திரம் இணைந்த நாளில் வரும் பவுர்ணமி தினம், புராண நிகழ்வுகளின் நினைவாக சிறப்பைப் பெறுகிறது. மற்ற பவுர்ணமிகளில் சிறு களங்கத்துடன் தோன்றும் சந்திரன், சித்திரா பவுர்ணமியன்று, பூரணக்கலைகளுடன் பூமிக்கு மிக அருகில் தோன்றும். சந்திரனும் சூரியனும் முழு நீசம் பெறும் இந்த நாளில், நாம் தெய்வங்களிடம் சரணடைந்து வழிபடுவது நன்மைகளைத் தரும் என்பது ஐதீகம்.


மனிதர்களின் பாவ புண்ணியங்களை எழுதி வைத்து அதற்கேற்றார்ப் போல், அவர்களின் இறப்பையும் அதன்பின் அவர்கள் வசிக்கப் போகும் சொர்க்கம்-நரகம் ஆகியவற்றை நிர்ணயிக்கும் பெரிய பொறுப்பில் உள்ள எம தர்மனின் உதவியாளரான சித்திரகுப்தனை வழிபடும் நாள்தான் இந்நாள். சித்ரகுப்தனின் பிறப்புக் குறித்து பல்வேறு புராண சம்பவங்கள் விவரிக்கப்பட்டாலும் அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய நிகழ்வாக இக் கதையே பெரும்பாலும் உள்ளது.


கயிலாயத்தில் ஒருநாள் அன்னை பார்வதி தேவி, பொழுதுபோக்காக ஒரு அழகிய ஆண் குழந்தையின் வடிவத்தை சித்திரமாக வரைந்து மகிழ்ந்தாள். அதே நேரத்தில் எல்லாம் வல்ல ஈசனிடம், விதி முடிந்த மனிதரின் உயிரைப் பறித்து பூமி மாதாவின் பாரத்தைக் குறைக்கும் பணியில் உள்ள எமதர்மன், அதிக வேலைப்பளு காரணமாகத் தான் அவதிப்படுவதாகவும், தனக்கு ஏற்ற சிறந்த உதவியாளரைத் தரும்படியும் வேண்டினான்.


அப்போதுதான் ஈசனிடம் தான் வரைந்த ஓவியத்தைக் காட்டினாள் அன்னை உமாதேவி. அழகில் சிறந்த அந்த ஆண் குழந்தையின் ஓவியம், ஈசனின் மனதை மயக்கியது. அந்நேரம் எமனின் வேண்டுகோள் நினைவில் தோன்ற, அவ்வோவியத்தைக் கையில் எடுத்த இறைவன் தன் மூச்சுக் காற்றை அவ்வோவியத்தில் செலுத்த, ஓவியத்தில் இருந்த குழந்தை உயிர்பெற்று வந்தது. சிவசக்தியின் அம்சமாக உருவான அக்குழந்தை சித்திரத்தில் இருந்து உயிர் பெற்றதால் ‘சித்ர குப்தன்’ எனப்பெயர் பெற்று ஈசனை வேண்டித் தவமிருந்து பல ஞானங் களைப் பெற்று வளர்ந்தது.


கல்வி வேள்விகளில் சிறந்தவன் ஆன சித்ரகுப்தனை தகுந்த வயதில் எமதர்மனிடம் அனுப்பி, மனிதர்களின் பாவப்புண்ணிய கணக்குகளை நெறி தவறாமல் எழுதி, எமனுக்கு உதவி செய்யும்படி பணித்தார் சிவபெருமான் என்கிறது புராணம்.


‘சித்’ என்றால் ‘மனம்’ என்றும், ‘குப்த’ என்றால் ‘மறைவு’ என்றும் பொருள். மனிதர்களின் மனதில் மறைந்திருக்கும் பாவ எண்ணங்களையும், மனதார செய்யும் நல்ல செயல்களின் புண்ணியத்தையும் கவனித்து எழுதி வைக்கிறார் சித்ரகுப்தர் என்பது நம்பிக்கை.


மனிதரின் பாவ புண்ணியக் கணக்குகளை எழுதும் பணிக்காக இறைவனால் தோற்றுவிக்கப்பட்ட சித்திரகுப்தன், பிறக்கும்போதே கையில் எழுத்தாணி ஏடுடன் பிறந்ததாக ஐதீகம். நாம் செய்யும் புண்ணிய செயல்களையும் பாவ செயல்களையும் தவறாமல் நடுநிலையாக, அவரவரின் பூர்வ புண்ணியங்களின் படி ஆராய்ந்து மறையாத எழுத்துக்களால் கணக்குப் புத்தகத்தில் எழுதுவதாக நம்பிக்கை. ஆகவேதான் அன்று சித்திரகுப்த பூஜையில் எழுத்தாணி மற்றும் கணக்கு நோட்டுப் புத்தகங்கள் வைத்து வாழ்வு வளம் பெற வேண்டுகின்றனர்.


சித்திரா பவுர்ணமியன்று பூஜையறையை சுத்தம் செய்து, சித்ரகுப்தன் படத்தை தெற்கு திசையில் வைத்து பூக்களால் அலங்கரிக்க வேண்டும். பின்னர் சந்தனப்பொட்டு வைத்து, பழங்கள்- காய்கறிகள், வேப்பம்பூ பச்சடி, பச்சரிசி வெல்லத்துடன் இனிப்புகள் மற்றும் கலவை சாதங்களை நைவேத்தியமாகப் படைக்க வேண்டும். ஐந்து முகம் கொண்ட குத்து விளக்கு ஏற்றி மனதில் உள்ள தீய எண்ணங்களை விலக்கி நல்ல எண்ணங்களை புகுத்தி தீப தூபம் காட்டி சித்ர குப்தனை மனதார வழிபட வேண்டும்.


சித்ரா பவுர்ணமியன்று களங்கமில்லாத முழுநிலவின் அழகைக் கண்டு ரசிக்க, கடற்கரை பூங்கா போன்ற இடங்களில் மக்கள் ஒன்று கூடுவார்கள். அவரவர் வீடுகளில் செய்த ‘சித்ரா அன்னம்’ எனப்படும் கலவை சாதங்களை எடுத்து வந்து, நிலாச்சோறு உண்ணும் வழக்கம் குடும்ப உறுப்பினர்களிடையே ஒற்றுமையையும் அன்பையும் பெருக வைக்கும் என்பதால் நம் பெரியோர்கள் கடைப்பிடித்த நல்வழி இது.


சித்ரா பவுர்ணமியின் சிறப்புகளாக பல ஆன்மிக வழிபாடுகளும், பூஜைகளும் ஆலயங்கள்தோறும் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக மதுரையில் அன்று கள்ளழகர் ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு தரிசனம் தருவது ஆண்டு தோறும் நிகழும் சிறப்புமிக்க வைபவமாகிறது. கன்யாகுமரியில் அன்று மட்டும் ஒரே நேரத்தில் சூரியன் மறைவதையும் சந்திரன் தோன்று வதையும் கண்டுமகிழலாம். திருவண்ணாமலையில் கிரிவலம் வரும் நிகழ்வு பிரசித்தி பெற்றதாக இருக்கிறது.


இந்த தினத்தில் சித்ரகுப்தனை வேண்டி, வருட பலாபலன்களை அறிந்து கொள்ளும் பஞ்சாங்கம் படிப்பதும், கடல் நீரில் நீராடுவதும் வாழ்வில் சுபீட்சத்தை அருளும்.


அன்றைய தினம் சித்ராதேவிக்கு (அம்பிகை) தேங்காய் சாதம், புளியோதரை, எலுமிச்சை சாதம், தயிர்சாதம், பருப்புபொடி சாதம், கறிவேப்பிலைப்பொடி சாதம், மாங்காய் சாதம், வெண்பொங்கல், சர்க்கரைப் பொங்கல், அரிசி உப்புமா, அவல் உப்புமா, கோதுமை உப்புமா ஆகியவைகளைப் படைத்து அவற்றை பசித்தோருக்கு தானமாகத் தந்து புண்ணியம் பெறலாம்.


கிடைக்கும் பலன்கள் 


பெளர்ணமி என்பது முழு நிலவு வானில் பிரகாசமாகத் தோன்றும் அற்புதமான நாள். இந்தநாளில், நல்ல அதிர்வலைகள் ஏற்படும். அப்பேர்ப்பட்ட சக்தி மிகுந்த நாளில், தேவி வழிபாடு செய்வது தீய சக்தியில் இருந்து நம்மைக் காக்கும். அம்மன் கோயிலுக்குச் சென்று பெளர்ணமி நன்னாளில் வழிபாடு செய்தால் வாழ்வில் இதுவரை பட்ட கஷ்டங்கள் அனைத்தும் விலகும்.


சித்ரா பௌர்ணமியன்று மதுரை கள்ளழகர் வைகையாற்றில் இறங்கி மண்டூக மகரிஷிக்கு அருள் புரியும் வைபவம் நடக்கிறது.


சித்திரை மாதத்தில் பிறந்தவர்கள், சித்ரா பெளர்ணமி அன்று சித்ரகுப்தனுக்கு பொங்கல் வைத்து வழிபடுவார்கள். மேலும் சித்ரா பௌர்ணமி அன்று அம்பாள் வழிபாடு செய்வதால் திருமண யோகம், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. சித்திரை மாதத்தில் சித்திரை நட்சத்திரத்துடன் கூடிய சித்ரா பௌர்ணமி வந்தால் மிகவும் விசேஷமானது.


மற்ற எந்த பௌர்ணமி தினங்களை காட்டிலும் விசேஷ சிறப்புகள் வாய்ந்த இந்த சித்ரா பௌர்ணமி தினத்தன்று கிரிவலம் வந்து இறைவனை வழிபட்டு உங்களால் முடிந்த தானம், தர்மங்கள் செய்வதால் உங்களுக்கு அனைத்து வித நன்மைகளும், சுபிட்சங்களும் ஏற்படும். இந்த சித்ரா பௌர்ணமி தினத்தன்று சித்திரகுப்தனை வழிபடுவதால் நீண்ட ஆயுளும், நோய்நொடி இல்லாத வாழ்வும் பக்தர்கள் கிடைக்கப்பெறுவார்கள்.

No comments:

Post a Comment