இன்று (பிப்.22) முதல் தொடர் முற்றுகை போராட்டத்துடன் உண்ணாவிரத போராட்டத்தையும் கையில் எடுக்கும் இடைநிலை ஆசிரியர்கள் - Minnalseithi

Latest

Search This Blog

Thursday, February 22, 2024

இன்று (பிப்.22) முதல் தொடர் முற்றுகை போராட்டத்துடன் உண்ணாவிரத போராட்டத்தையும் கையில் எடுக்கும் இடைநிலை ஆசிரியர்கள்

 இன்று (பிப்.22) முதல் தொடர் முற்றுகை போராட்டத்துடன் உண்ணாவிரத போராட்டத்தையும் கையில் எடுக்கும் இடைநிலை ஆசிரியர்கள்


தமிழ்நாட்டில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களில் சமவேலைக்கு சம ஊதியம் கேட்டு 3வது நாள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். மேலும், இன்று (பிப்.22) முதல் தொடர் முற்றுகை போராட்டத்துடன் கூடிய உண்ணாவிரத போராட்டத்தையும் அரசு கொடுக்கும் உணவையும் புறக்கணித்து போராட உள்ளதாக இடைநிலை ஆசிரியர் சங்கத்தினர் தெரிவித்து உள்ளனர்.


தமிழ்நாட்டில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள் சமவேலைக்கு சம ஊதியம் கேட்டு 3வது நாள் போராட்டத்தில் ஈடுப்பட்ட நிலையில், அவர்களை கைது செய்த போலீசார், அவர்களுடன் சாலையில் நின்ற பொதுமக்களையும் கைது செய்து அழைத்து சென்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


தமிழ்நாட்டில் உள்ள தொடக்கக் கல்வித்துறையில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களில் 2009 ஜூன் 1-க்குப் பின்னர் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கும், அதற்கு முன்னர் நியமனம் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கும் ஊதிய முரண்பாடுகள் இருந்து வருகிறது. 1.6.2009-க்கு முன் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதியம் 8 ஆயிரத்து 370 ரூபாய் என்றும், அதன் பின்னர் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு 5 ஆயிரத்து 200 ரூபாய் என உள்ளது.


ஒரே கல்வித் தகுதி மற்றும் ஒரே பணி என இருந்த போதும் இரண்டு விதமான ஊதியங்கள் நிர்ணயிக்கப்பட்டதை களையக் கோரி, இடைநிலை ஆசிரியர்கள் கடந்த 12 ஆண்டுகளாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். கடந்த அதிமுக ஆட்சியின் போது, எதிர்க்கட்சி தலைவராக இருந்த தற்போதைய முதலமைச்சர், நேரில் சென்று போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, திமுக தேர்தல் அறிக்கை வரிசை எண் 311-இல் 20 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்களுக்குச் சம வேலைக்கு, சம ஊதியம் வழங்கப்படும் என இடைநிலை பதிவு மூப்பு பட்டதாரி ஆசிரியர்களின் கோரிக்கையை இடம் பெறச் செய்தார்.


இந்த ஒற்றைக் கோரிக்கையை வலியுறுத்தி 19ஆம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் சென்னையில் 3வது நாளாக போராட்டத்தில் ஈடுபடுவதற்கு வருகைத் தந்த இடைநிலை ஆசிரியர்களை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்திலேயே காவல்துறையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்டு வாகனத்தில் இருந்த ஆசிரியர் மீது பெண் காவல்துறை அதிகாரி தாக்க முயலும் போது சக ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் வீடியோவும் வெளியாகி பரபரப்பை உள்ளது.


பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுடன், காவல் துறையினர் பொதுமக்களையும் கைது செய்ததாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். SSTA இடைநிலை ஆசிரியர்களின் மாநில பொதுச் செயலாளர் ராபர்ட் கூறும் போது, "மூன்று மாதங்களுக்கு முன்னர் செப்டம்பர் மாதம் 28ஆம் தேதி காலாண்டு விடுமுறையில் தொடங்கி அக்டோபர் மாதம் 5ஆம் தேதி வரை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.


இந்த சூழ்நிலையால் அப்போது பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சமவேலைக்கு சம ஊதியம் கேட்டுப் போராடுபவர்களின் கோரிக்கை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். தற்போது 5 மாதங்கள் கழித்தும் இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாட்டை களைய எந்த நடவடிக்கையும் எடுக்காததால், எப்போதும் மாணவர் கல்வி நலன் கருதி காலாண்டு மற்றும் அரையாண்டு விடுமுறை போன்ற விடுமுறை நாட்களில் மட்டுமே தங்கள் உடலை வருத்திக் கொண்டு உண்ணாமல் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவதை வாடிக்கையாகக் கொண்டிருந்தனர்.


இந்த நிலை மாறி, தற்போது பள்ளி வேலை நாட்களில் முற்றுகைப் போராட்டத்தை இடைநிலை ஆசிரியர்கள் கைகளில் எடுத்துள்ளோம். ஏமாற்றுவதை மட்டுமே தொடர்ந்து செய்ததால் பள்ளி நாட்களில் போராடுகிறோம். எங்களது நியாயமான இந்தப் போராட்டத்திற்கு பொதுமக்களின் ஆதரவை வேண்டுகிறோம். போராட்டம் முடியும் போது முன்பை விடவே எங்கள் கற்றல் பணியை சிறப்பாக செய்து முடிப்போம்" என தெரிவித்தார்.


இதனிடையே இடைநிலை ஆசிரியர் சங்கம் வெளியிட்டு உள்ள அறிக்கையில், "கடந்த மூன்று நாட்களாக தொடர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டும் அரசு தரப்பில் பேச்சுவார்த்தைக்கு முடிவுக்கு கொண்டு வராத காரணத்தினால் நாளை (பிப்.22) முதல் தொடர் முற்றுகை போராட்டத்துடன் கூடிய உண்ணாவிரத போராட்டத்தையும், அரசு கொடுக்கும் உணவை புறக்கணித்தும் போராடவிருக்கிறோம்" என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment