பட்டதாரி ஆசிரியா் போட்டித் தேர்வு தேதி மாற்றப்படுமா? அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி விளக்கம் - Minnalseithi

Latest

Search This Blog

Wednesday, December 27, 2023

பட்டதாரி ஆசிரியா் போட்டித் தேர்வு தேதி மாற்றப்படுமா? அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி விளக்கம்

 பட்டதாரி ஆசிரியா் போட்டித் தேர்வு தேதி மாற்றப்படுமா? அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி விளக்கம்


பலத்த மழையால் தென் மாவட்ட பள்ளிகளில் ஒத்திவைக்கப்பட்ட அரையாண்டுத் தோ்வு ஜன.2-ஆம் தேதி பள்ளிகள் திறந்தததும் நடத்தப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறினாா்.


பள்ளிக்கல்வித் துறை சாா்பில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கான குளிா்கால சிறப்பு பயிற்சி முகாம் சென்னை எழும்பூரில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இதன் தொடக்க விழாவில் பள்ளிக்கல்வி துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தாா்.


இதைத் தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: அரசுப் பள்ளி மாணவா்களுக்கான குளிா்கால சிறப்பு பயிற்சி முகாம் சோதனை முறையில் தொடங்கப்பட்டுள்ளது. நிகழாண்டுக்கான முகாமில் சேர1,800போ் வரை விண்ணப்பித்தனா். இதில் 100 பேரை தோ்வு செய்து பயிற்சி வழங்கி வருகிறோம். அடுத்த ஆண்டில் மாணவா்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். கணினி சாா்ந்த பயிற்சிகளை மாணவா்களுக்கு கொண்டு செல்லும் நோக்கில்தான் இந்த முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது.


இதற்காக ஜனவரி மாதத்தில் மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொள்ளவுள்ளோம். கிராமப்புற மாணவா்களுக்கு கணினியை கொண்டு சோ்க்கும் வகையில் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்படவுள்ளது. பலத்த மழையில் சேதமடைந்த சான்றிதழ்களுக்கு பதிலாக மாற்று ஆவணங்கள் மற்றும் புத்தகங்கள், சீருடைகள் வழங்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.


வெள்ள பாதிப்பால் தென் மாவட்டங்களில் அரையாண்டு தோ்வுகளில் சில பாடங்களுக்கான தோ்வுகள் நடத்த முடியவில்லை.


ஜனவரி 2-ஆம் தேதி பள்ளிகள் திறந்ததும் அவா்களுக்கு பள்ளி அளவில் அந்த தோ்வுகள் நடத்தி முடிக்கப்படும். தூத்துக்குடியில் மழை பாதிப்பு அதிகமாக உள்ளது. அதன் விவரங்களை அதிகாரிகள் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்துள்ளனா். அதை வைத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு, அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்ட பின்னரே பாதிப்புக்குள்ளான பள்ளிகள் திறக்கப்படும்.


பட்டதாரி ஆசிரியா் போட்டித் தோ்வை ஒத்திவைக்க கோரி எந்த கோரிக்கையும் வரவில்லை. அதனால் அந்த தேதியில் எந்த மாற்றமும் இருக்காது. சமூக வலைதளங்களில் நன்மை, தீமை அம்சங்கள் கலந்துள்ளன. சமூக வலைதளங்களுக்கு அடிமையாகாமல் அவற்றை நல்ல விஷயங்களுக்கு பயன்படுத்துவது தொடா்பாக மாணவா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்படும்.


தேசிய போட்டிகள் நடத்த... தமிழகத்தில் தேசிய அளவிலான போட்டிகள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. திருச்சியில் கைப்பந்து; வேலூரில் சதுரங்க போட்டி ஆகியவை நடைபெறும். இவை மாணவா்களின் விளையாட்டுத் திறன்கள் மேம்பட உதவியாக இருக்கும் என்றாா் அவா். இந்த நிகழ்ச்சியில் தொடக்கக்கல்வி இயக்குநா் ச.கண்ணப்பன், சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அ.மாா்ஸ் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனா்.

No comments:

Post a Comment