நாம் படைக்கும் உணவுகளை கடவுள் சாப்பிடுவாரா?சாப்பிட்டதை எப்படி தெரிந்து கொள்வது? - Minnalseithi

Latest

Search This Blog

Sunday, August 20, 2023

நாம் படைக்கும் உணவுகளை கடவுள் சாப்பிடுவாரா?சாப்பிட்டதை எப்படி தெரிந்து கொள்வது?

நாம் படைக்கும் உணவுகளை கடவுள் சாப்பிடுவாரா?சாப்பிட்டதை எப்படி தெரிந்து கொள்வது?
நிவேதனம் என்றால் சுவாமியை சாப்பிட வைத்தல் என்பது பொருள் அல்ல. அறிவித்தல் என்று அர்த்தம்.

 “இறைவா, இந்த சமயத்தில் எனக்கு இந்த உணவை உண்ணத்தந்து, உயிர் காத்த உனக்கு மிக்க நன்றி’’ என்று அறிவிப்பதே நிவேதனமாகும். 

வைணவத்தில் “கண்டு அருளச் செய்தல்’’ என்பார்கள்.பல மஹான்கள் தந்ததை இறைவன் சாப்பிட்டதாக பல தகவல்கள் உண்டு. 

ராமனுஜர், அரங்கனுக்கு படைக்கப்பட்ட நிவேதனம் வரும்போது பார்ப்பாராம், அதில் ஏதேனும் ஒரு நகக்குறியாவது இருக்கிறதா என்று பார்ப்பாராம். 

இறைவன் சாப்பிடுவாரா, சாப்பிட்டதை எப்படி தெரிந்து கொள்வது என்பதை உணர ஒரு கதை.

சிஷ்யன் ஒருவன் தன் குருவிடம் இதே மாதிரி கேள்வி கேட்டான்.‘‘குருவே, நாம் படைக்கும் நைவேத்யத்தை இறைவன் அருந்துகிறார் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. 

இறைவன் சாப்பிட்டால் நாம் பிறருக்கு எப்படி பிரசாதமாக வழங்க முடியும்? கடவுள், படையலை சாப்பிடுவாரா?” என்று கேட்டான்.

குரு எதுவும் சொல்லாமல் அவனை ஊடுருவிப் பார்த்துவிட்டு ‘‘நமது வேதாந்த வகுப்புக்கு நேரமாகிவிட்டது. வகுப்பறையை தயார் செய். சிறிது நேரத்தில் நானும் வருகிறேன்” என்றார்.

அனைத்தும் பூர்ணமான வஸ்துவிலிருந்தே தோன்றியது என பொருள் கொண்ட “பூர்ணமிதம்” எனும் உபநிஷத்தில் வரும் மந்திரத்தை விளக்கினார் குரு. 

அனைத்து மாணவர்களும் மந்திரத்தை மனதில் உருப்போட துவங்கினர்.

சிறிது நேரத்திற்கு பிறகு கேள்வி கேட்ட சிஷ்யனை சைகையால் அழைத்தார் குரு.

 குருவின் முன் பணிவுடன் வந்து வணங்கி நின்றான். “மந்திரத்தை மனதில் ஏற்றி கொண்டாயா?” என்றார்.

 “மனப்பாடமாகிவிட்டது குருவே”.

“எங்கே ஒரு முறை சொல் பார்ப்போம்”

 கண்கள் மூடி மனதை ஒருநிலைப் படுத்தி கணீர் குரலில் கூற துவங்கினான் 

‘‘பூர்ண மித பூர்ண மிதம் …” என கூறி முடித்தான். 

மெல்ல புன்சிரிப்புடன் குரு தொடர்ந்தார்;‘‘நீ சரியாக மனதில் உள் நிறுத்தியதாகத் தெரியவில்லையே. 

எங்கே உனது புத்தகத்தை காட்டு” 

பதட்டம் அடைந்த சிஷ்யன், புத்தகத்தைக் காண்பித்து கூறினான்.

“குருவே தவறு இருந்தால் மன்னியுங்கள். ஆனால், நான் கூறியது அனைத்தும் இதில் இருப்பதை போலவே கூறினேன்…

”“இந்த புத்தகத்திலிருந்து படித்துதான் மனதில் உள்வாங்கினாயா?”.

 ‘‘ஆம்

’’“இதிலிருந்து உள்வாங்கினாய் என்றால் மந்திரம் இதில் இருக்கிறதே? நீ உன் மூளையில் மந்திரத்தை ஏற்றிக் கொண்டால் புத்தகத்தில் இருக்கக் கூடாதல்லவா?”

 சிஷ்யன் குழப்பமாகப் பார்த்தான். 

குரு தொடர்ந்தார்.“உனது நினைவில் நின்ற மந்திரம் சூட்சம நிலையில் இருக்கிறது.

 புத்தகத்தில் இருக்கும் மந்திரம் ஸ்தூல வடிவம். 

இறைவன் சூட்சம நிலையில் இருப்பவன்.

 இறைவனுக்குப் படைக்கப்படுவது ஸ்தூல வடிவில் இருந்தாலும், அவன் சூட்சமமாகவே உட்கொள்கிறான்.

நீ உள்வாங்கிய பின் புத்தகத்தில் மந்திரம் அளவில் குறைந்துவிட்டதா? அது போலதான், இறைவன் உட்கொண்ட பிரசாதம் அளவில் குறையாமல் நாம் எல்லோரும் உண்கிறோம். 

ஸ்தூலமாக இருக்கும் நாம் ஸ்தூலமாகவும், சூட்சுமமாக இருக்கும் இறைவன் சூட்சுமமாகவும் நைவேத்தியத்தை உட்கொள்கிறோம்.

No comments:

Post a Comment