ஆடிக்கிருத்திகை 2023:முருகனை வழிபட உகந்த நேரம், வழிபாட்டு முறை மற்றும் விரத பலன்கள் - Minnalseithi

Latest

Search This Blog

Tuesday, August 8, 2023

ஆடிக்கிருத்திகை 2023:முருகனை வழிபட உகந்த நேரம், வழிபாட்டு முறை மற்றும் விரத பலன்கள்

ஆடிக்கிருத்திகை 2023:முருகனை வழிபட உகந்த நேரம், வழிபாட்டு முறை மற்றும் விரத பலன்கள்
ஆடி மாதம் அம்மனுக்கு மட்டுமல்ல அனைத்து தெய்வங்களையும் வழிபட மிகவும் ஏற்ற மாதமாகும். 

அப்படி ஆடி மாதத்தில் வரும் சிறப்பான நாட்களில் ஒன்றாகவும், முருகப் பெருமானை வழிபடுவதற்கு ஏற்ற நாளாகவும் கருதப்படுவது ஆடிக்கிருத்திகை நாளாகும். 

 முருகப் பெருமான் அவதரித்தது விசாகம் நட்சத்திரத்தில் என்றாலும் அவரை வளர்த்தெடுத்தது கார்த்திகை பெண்கள் என்பதால் அவர்களை சிறப்பிக்கும் வகையில் கார்த்திகை நட்சத்திரம் முருகப் பெருமானை வழிபடுவதற்கு ஏற்ற நட்சத்திரமாக மாறியது.

 மாதம்தோறும் கார்த்திகை நட்சத்திரம் வந்தாலும் தை, கார்த்திகை, ஆடி மாதங்களில் வரும் கார்த்திகை நட்சத்திரம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.

 முருகப் பெருமான், செவ்வாய் கிரகத்திற்கு உரிய தெய்வம் என்பதால் ஆடி மாதத்தில் வரும் கிருத்திகை நட்சத்திரத்தில் முருகப் பெருமானை வழிபட்டால் செவ்வாய் தோஷம் உள்ளிட்ட அனைத்து தோஷங்களும் நீங்கும்.

 அதோடு வீடு-மனை, சொத்துக்கள் தொடர்பான பிரச்சனைகள் நீங்கும். திருமணத் தடை அகலும். ஆடி மாதம் தட்சணாயன காலத்தின் துவக்க மாதம் என்பதால் முருக பக்தர்கள் பலரும் ஆடி மாத கிருத்திகையில் துவங்கி, தை மாத கிருத்திகை வரையிலான 6 மாதங்கள் கிருத்திகை விரதம் கடைபிடிப்பார்கள்.

 ஆடிக்கிருத்திகை 2023 தேதி :

 இந்த ஆண்டு ஆடி கிருத்திகை இன்று (ஆகஸ்ட் 9-ம் தேதி) புதன்கிழமை வருகிறது. இன்று காலை 07.33 மணிக்கு துவங்கி, நாளை (ஆகஸ்ட் மாதம் 10 -ம் தேதி) காலை 07.44 வரை கிருத்திகை நட்சத்திரம் உள்ளது.

 இன்று காலை 09.15 முதல் 10.15 வரை நல்ல நேரம் என்பதால் காலை 9 மணிக்கு துவங்கி 11 வரை முருகப் பெருமானுக்குரிய பூஜைகளை செய்து வழிபடலாம். 

 ஆடிக்கிருத்திகை வழிபாட்டு முறை : 

 ஆடி கிருத்திகை அன்று முருகனின் அறுபடை வீடுகளில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், பூஜைகள் நடத்தப்படும். கார்த்திகை விரதம் இருப்பவர்கள் உப்பில்லா உணவை எடுத்துக் கொண்டு விரதம் இருப்பது சிறப்பானதாகும்.

 கார்த்திகை விரதத்தன்று கந்தசஷ்டி பாராயணம் செய்து, மறுநாள் ரோகிணி நட்சத்திரத்தன்று காலையில் குளித்து விட்டு, பக்தர்களுக்கு அன்னதானம் செய்து விட்டு, பிறகு விரதத்தை நிறைவு செய்வது சிறப்பானதாகும். கந்தசஷ்டி கவசத்துடன் கந்த குரு கவசம், திருப்புகழ் படிப்பது மிகப் பெரிய புண்ணியத்தை தரும். திருமணம் ஆகாதவர்கள் ஆடி கிருத்திகை நாளில் திருப்புகழில் உள்ள பாடலை பாராயணம் செய்து வழிபடுவதால் விரைவில் திருமண வரம் கூடி வரும். 

பகல் முழுவதும் உப்பில்லாமல் உணவு எடுத்துக் கொண்டு, மாலையில் அருகில் உள்ள முருகப் பெருமான் கோவிலுக்கு சென்றும் விரதத்தை நிறைவு செய்யலாம்.

 முருகனுக்கு உகந்த கார்த்திகை விரதம் இருந்தால் அந்த ஆறுமுகனைப்போல அழகான பிள்ளை பிறக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. கிருத்திகை நட்சத்திரத்தில் விரதம் இருந்து தானம் செய்யும் எஜமானனும் அவன் வம்ச பரம்பரையினர்களும் அளவற்ற நன்மைகளை அடைவார்கள் என்று புராணங்கள் கூறுகின்றன. 

கார்த்திகை விரதம் ஏன் எப்படி எதற்காக என்றும் அந்த விரதம் இருந்து யாருக்கு என்ன நன்மை கிடைத்தது?

 கார்த்திகை விரதம்: 

தட்சிணாயன புண்ணிய காலமான ஆடி மாதத்தில் வரும் கார்த்திகை நட்சத்திரமும், தை மாதமான உத்தராயன புண்ணிய காலமாக தை மாதத்தில் வரும் கார்த்திகையும் சிறப்பாக முருகப்பெருமான் ஆலயங்களில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. முருகனுக்காக பலரும் விரதம் இருக்கின்றனர். உப்பில்லா உணவை எடுத்துக் கொண்டு கார்த்திகை விரதம் இருப்பது சிறப்பானது. இது உயர்வாகவும் கருதப்படுகிறது.

 கிருத்திகை நட்சத்திரத்தன்று விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபடுபவர்கள் நிறைவான அறிவு, நிலையான செல்வம், நீண்ட ஆயுள், அன்பும் பண்பும் நிறைந்த வாழ்க்கைத்துணை, நல்ல குணமுள்ள பிள்ளைகளை அருளுவார் முருகப்பெருமான். 

 செவ்வாய் தோஷம்: செவ்வாய் கிரகத்தால் ஏற்படும் திருமணத்தடை, செவ்வாய் தோஷ தடை, கர்ம புத்திர தோஷம், மண், மனை சொத்து வழக்குகளில் பிரச்னைகள், சகோதரர்களால் சங்கடங்கள் குரு திசை, செவ்வாய் திசையால் பாதிக்கப்பட்டவர்கள் ஆடி கிருத்திகை தினத்தில் முருகனை நினைத்து விரதம் இருந்தால் கவலைகளும் பிரச்னைகள் நீங்குவதோடு வாழ்வில் மகிழ்ச்சி உண்டாகும்.

 கார்த்திகையின் சிறப்பு:

 சிவனின் நெற்றிக்கண்ணில் இருந்து அக்னி ரூபத்தில் உதித்தவர் ஆறுமுகப்பெருமான்.

 சரவணப்பொய்கையில் தாமரை மலரில் விடப்பட்ட ஆறு குழந்தைகளையும் கார்த்திகைப் பெண்கள் எடுத்து வளர்த்தனர். இந்த கார்த்திகைப் பெண்களை சிறப்பிக்கும் விதமாக முருகப்பெருமான் கார்த்திக்கேயன் என்று அழைக்கப்படுகிறார்.

 சிவன் அளித்த வரத்தின் படி இந்த கார்த்திகை நட்சத்திரம் வரும் நன்னாளில் விரதம் இருந்து முருகனை வணங்கினால் அறிவு, செல்வம், நீண்ட ஆயுள், நிம்மதியான வாழ்க்கை, நிறைவான சொந்தங்கள், குணமுள்ள குழந்தைகள் கிடைப்பார்கள் என்பது நம்பிக்கை. 

 கார்த்திகை விரத பலன்கள்: 

கார்த்திகை நாளில் கந்த சஷ்டி கவசம் படிப்பது சிறப்பு. இன்றைய தினம் உப்பு சேர்க்காத உணவு சாப்பிடலாம் அல்லது வெறும் தண்ணீர் மட்டும் குடித்து விரதம் இருக்கலாம். மறுநாள் ரோகிணியன்று காலையில் மீண்டும் குளித்து விட்டு கந்தன் அடியார்களுக்கு அன்னதானம் செய்து விட்டு சாப்பிடலாம். 

கார்த்திகை விரதத்தை தொடர்ந்து பன்னிரெண்டு ஆண்டுகள் பின்பற்றுவதால் வாழ்க்கையின் பெரும் வெற்றிகளைப் பெறலாம். கார்த்திகை விரதத்தினை தொடர்ந்து பன்னிரெண்டு ஆண்டுகள் பின்பற்றி நாரதர் தேவரிஷி என்ற பட்டத்தை பெற்றாராம். 

திரிசங்கு, பகீரதன், அரிசந்திரன் ஆகியோர் பேரரசர்கள் ஆனார்கள் என்கிறது புராணம். வேண்டிய வரம் கிடைக்கும்: மாதாமாதம் வரும் கார்த்திகை மாதக்கார்த்திகை அல்லது கிருத்திகை விரதம் எனப்படும்.

 கார்த்திகை மாதத்தில் வரும் பெரிய கார்த்திகை மற்றும் கார்த்திகை தீபவிழா எனப்படும். தை மாதம் வரும் தை கிருத்திகை, ஆடி மாதத்தில் வரும் ஆடிக் கிருத்திகை. இந்த மூன்றும் கார்த்திகேயக் கடவுளுக்கு உகந்த நாட்கள். ஆடிக்கிருத்திகையில் விரதம் இருந்து முருகனை வழிபடுவதால் வேண்டிய வரங்கள் கிடைக்கும். தை மாதக் கார்த்திகையை விட ஆடிக் கார்த்திகையே சிறப்பாகவும் சொல்லப்படுகிறது. 

ஆடி மாதத்தில் இருந்து தொடங்கி ஆறுமாதங்கள் கார்த்திகை விரதம் இருந்து தை மாதக் கார்த்திகையில் விரதத்தை முடிக்கலாம். கிருத்திகையில் மட்டும் நட்சத்திரங்கள் தாராளமாக இருப்பதால் அந்த நட்சத்திரத்தில் தானம் செய்யும் எஜமானனும் அவன் வம்ச பரம்பரையினர்களும் அளவற்ற நன்மைகளை அடைகிறார்கள். 
அத்தனை சிறப்பு வாய்ந்தது கார்த்திகை விரதம். 

No comments:

Post a Comment